சுகந்தமாய் வருகிறாய்
- ஸ்ரீ சத்திய சாயிசிவமே நீ தானே எங்களகமே
- அகமும் புறமும் உன் தவமே
- சீலமும் சாலமும், உன் மதி முகமே
- ஸ்ரீசைலபுரத்து ஈசனே, பர்த்தித் தலப்பர சிவனே பரபிரம்ம
- சாயீசா, எங்குமெதிலும் நீயிருந்துதானே உறைகின்றாய்
- பக்தர் குறை தீர அருளுரை, அறவுரை, யுரைக்கின்றாய்
- அமுத மொழிகளுரைத்துச் சனாதன தர்மத்தில்
- வழிநடத்துகின்றாய்
- அரனும், அரியுமாயிருந்தன்பு வழியருள்கிறாய்
- சனாதன தர்மமளித்துச், சாந்நித்திய மளிக்கின்றாய்
- அலைகளில் நீர்த்துளியாய், மேகங்களில் மழையாய்க்
- காற்றினில் சுகந்தமாய், வியாபகமாய்ப், பரந்து விரிந்து
- கருணை செய்கிறாய்
- வீணையின் நாதத்தில், குழலின் இனிமையில், வேள்வி
- கேள்வியில், எங்குமெதிலும் நிறைந்து காட்சி தருகிறாய்
- நினைத்தாலே அபயமளித்து அருள் சுரக்க ஓடிவருகிறாய்
- எத்தெய்வப் பெயரிலழைத்தாலும் முப்போதும் தப்பாது
- வந்து சாட்சியாகிறாய்
- சிவனின்றிச் சீவனில்லையதில்
- அன்பே சிவமாய் மாட்சியளிக்கிறாய்
- நாயன்மார்களும், சிவனடியார்களும், பக்தர்களும்,
- உன் தீட்சையில் மீட்சி பெற வைக்கிறாய்
- நான்மறையில் வேதமாய்க், கீதமாய், நாதமாய்க்
- நல்லுலகில் நற்பவி நல்குகிறாய்
- அனைத்துயிர் உருவிலும் நிறைந்து நின்று கருணை செய்யும்
- கருணாமூர்த்தி சாயீசா உன் மலரடி சரணம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்