‘நான்’ களையச் சொல்வாய்
- சுவாமி நின் சரணங்கள் இருளை அகற்றிப்
- பிரகாசத்தை அளிக்கிறது
- நின் திருவடித் தாமரைகள் சரணாகதி நல்கி
- மனச்சாந்தி தருகிறது
- நின் பாத கமலம் பணிந்தவர்க்குப்
- பாவ விமோசனம் சித்திக்கிறது
- நின் பாதாரவிந்தம் ஆதாரச்சொந்தமாய் பாந்தமாய்
- என்றும் துணை நின்று காக்கிறது
- கூப்பிட்ட குரலுக்குக் கஜேந்திர மோட்சமாய்
- வந்து அபயக்கரம் தருகின்றாய்
- ‘நான் இருக்கப் பயமேன்’ என்று
- அபயஹஸ்தம் அளிகின்றாய்
- “நான்” களைய நல்அருள்மொழி பகர்கின்றாய்
- நானாவிதப் பரிமளப் புஷ்பங்கள் மணம் வீசுவது போல்
- பன்மதப் பக்தருக்கும் நற்பவி நற்கதியருள்கின்றாய்
- சிவம் பிரம்மா விஷ்ணுவும் ராம கிருஷ்ணதத் தாத்ரேயரும்
- அலை, கலை, மலை, மகள்களும் மூலமும் முடிவும்
- நீயாய் அவரவர் தெய்வமாய்க்காட்சி தந்துகடாட்சித்துப்
- பிறவிக் கடலைக் கடக்கக் கடைத்தேற்றுகின்றாய் சுவாமி
- தேவர்களணி வகுத்துத்தொழுதிடும் சாயிதேவனுன்
- வியாபகம் வையம் முழுதும் பரவட்டும்
- பயிர்கள் செழித்து வளரட்டும்
- அனைத்துயிர்களும் நிலைத்த அன்பில் மலரட்டும்
- ஆன்மீகச் சனாதன தர்மம் தழைக்கட்டும்
- கல்வி கேள்வி பண்பாடு புனித கலாச்சாரத்தில்
- பாரதம் சிறக்கட்டும்
- உன் அன்பு மதம் அதிசயம் புரியட்டும்
- உன் அற்புதவினோத லீலைகள் தொடரட்டும்
- நின்சரணங்கள் நாமஸ்மரணைகள் சாஸ்வத
- சாந்நித்ய மளிக்கும் தருணங்களாகட்டும்
- உனது தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷணத்தில்
- நெக்குருகித் தொழுகின்றோம் சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்