பர்த்தீஸ்வரன் பதிகம்
Sairam! This is available only in Tamil*

- வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை
 - வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை
 - மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள்
 - மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே
 - நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன்
 - நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை
 - சாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய்
 - சத்தியனே நித்தியனே சாந்தப் பொருளே! (1)
 
- இணங்காரை நண்பரென எண்ணிக் கொண்டு
 - இல்லாத செல்வத்துக் கேங்கிக் கொண்டு
 - நிணந்தன்னை உணவென்று நித்தம் தின்று
 - நெறியில்லா நெறிநின்று நெஞ்சில் அதனை
 - வணங்காத சுதந்திரமென்(று) இறுமாப் புண்டு
 - வாழுகிறோம்! வந்தாய்நீ எம்மைக் காக்க!
 - மணம்வீசும் மலர்சூழும் பர்த்தீச் சுரனே
 - மலர்ப்பாதம் தரவேணும் மாந்தர்க் கரசே! (2)
 
- அன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே
 - அன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே
 - அன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து
 - அறவழியில் சேர்க்கின்ற ஐயா! எம்போல்
 - வன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்
 - வார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே
 - அன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே
 - அருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே! (3)
 
- அங்கியினை மேலேற்றி அங்கை கீழாய்
 - அழகாகச் சுற்றியபின் அதனில் பாங்காய்ப்
 - பொங்கிவரும் பூதியினைத் தருவாய், தந்தே
 - போக்கிடுவாய் போகாத நோய்கள் கூட!
 - வெங்கதிரின் ஒளியோனே! விரிந்த அண்டம்
 - விதமாகச் சமைத்தோனே, வேதப் பொருளே!
 - சங்கரனே சக்கரனே படைப்பின் தேவே!
 - சாயீசா பர்த்தீசா தருவாய் பாதம்! (4)
 
- ஆண்கட்குள் ஆணானாய், அரிதாம் பக்தி
 - அதுகொண்ட பெண்களிடைப் பெண்மை பூண்டாய்
 - தேன்மழலைச் சிறுவரிடைச் சிறுவன் ஆனாய்
 - சிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்
 - வேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்
 - விம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்
 - பூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே
 - போற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே! (5)
 
- ஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை
 - ஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே
 - காமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே
 - அல்லனெனத் தோன்றுவதும் யானே என்பாய்!
 - நாமத்தை வாயாலே சொல்லிப் பாடி
 - நாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்
 - சேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே
 - சீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே! (6)
 
- நானீயே நீநானே இப்பே ருண்மை
 - நாமறியாக் காரணத்தால் கருணை கொண்டு
 - வானேகும் வைகுந்தம் தன்னை நீங்கி
 - வந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு
 - தேனான மொழியாலே மீண்டும் மீண்டும்
 - தெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்!
 - கோனே!நற் கற்பகத்தின் கொம்பே, பர்த்தி
 - கொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே! (7)
 
- பேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்
 - பெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்!
 - கூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்
 - குறுநகையே விடையாகத் தருவாய் தேவே!
 - மாசான ஆணவமாம் மலத்தை நீக்கி
 - மாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி
 - தேசான ஞானத்தைத் தருவாய் போற்றி!
 - தேவர்க்கும் அரிதான சாயி போற்றி! (8)
 
- கொண்டமரின் வழிவந்தாய் ஈஸ்வ ராம்பா
 - கும்பிக்குள் ஒளிப்பந்தாய் குடியே றிட்டாய்!
 - அண்டையிலே கர்ணத்தின் இல்லம் போந்தாய்,
 - அன்னைபல ராவதெதும் புதுமை யன்றே!
 - வண்டமரும் தாமரையாய்ப் பாதம் கண்கள்
 - வணங்கியவர் வாழ்வுக்குப் பொறுப்பை ஏற்றுக்
 - கொண்டதிருக் கைகளிவை கொண்டோய் வாழி!
 - கொடுப்பதுவே கொள்கையெனக் கொண்டாய் சாயீ! (9)
 
- எம்மையெம் மிடமிருந்தே காப்போன் நீயே!
 - எல்லார்க்கும் எல்லாமும் ஆவோன் நீயே!
 - இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் நீயே!
 - ஏழிசையில் நாதமென நின்றாய் நீயே!
 - செம்மைக்குள் சேர்க்கின்ற செய்யோன் நீயே!
 - சிறுமதியைத் தீய்க்கின்ற சீரோன் நீயே!
 - அம்மையென அப்பனென ஆனோன் நீயே!
 - ஆரறிவார் நின்புகழைச் சாயீ முற்றும்! (10)
 
  
  Help Desk Number: