பேசாமல் பேசிக்கிடப்பதுவும் எக்காலம்?

- ஐம்புலனை அடக்கி
 - ஐங்கரனைத் தெண்டனிட்டு
 - ஐம்பொன்னை அடைந்து
 - அருள்பெறுவது எக்காலம்?
 
- ஓயாமல் அழுது
 - உள்ளுடைந்து போகாமல்
 - மாயன் அருள்பெற்று
 - மகிழ்ந்திருப்பது எக்காலம்?
 
- அவக்கடலில் மூழ்கி
 - ஆவிபறி போகாமல்
 - சிவசக்தி ரூபனிடம்
 - சேர்ந்திருப்ப தெக்காலம்?
 
- பிரசாந்தி நிலையத்தில்
 - பேரின்பத் தேனருந்தி
 - பரசாந்தி கொண்டு
 - வாழ்ந்திடுதல் எக்காலம்?
 
- மையல் கொண்டந்த
 - மாதவனின் திருவடியில்
 - பையப் பரமபதம்
 - அடைந்திடுவது எக்காலம்?
 
- பந்தம் அறுத்தெறிந்து
 - பரமன்தனை மட்டும்
 - சொந்தங் கொண்டாடும்
 - நிலைவருவது எக்காலம்?
 
- ஆடம்பரமும் பகட்டும்
 - அழிகின்ற சுகமும்
 - வேடமென்று நீக்கி
 - வெளியேறல் எக்காலம்?
 
- தித்திக்கும் அமுதத்தை
 - சிவஞான சத்யத்தை
 - முத்திதரும் மூலவனை
 - நினைந்திடுவது எக்காலம்?
 
- சிவானந்தத் தேன்பொழியும்
 - பர்த்தீசன் பாதத்தில்
 - தவானந்தங் கொண்டு
 - தனித்திருப்ப தெக்காலம்?
 
- ஆசாபாச மெலாம்
 - அடங்கி ஈசனிடம்
 - பேசாமல் பேசிக்
 - கிடப்பதுவும் எக்காலம்?
 
- இதயத் தாமரையை
 - ஈசனுக்குச் சூட்டி
 - உதயத்தைக் கண்டு
 - ஒடுங்குவதும் எக்காலம்?
 
- ஆனந்த மூர்த்தியின்
 - அவதார மகிமையினை
 - ஆனந்தமாய் நுகர்ந்து
 - அடங்குவது எக்காலம்?
 
- தேனுகர்ந்த வண்டாய்
 - தியானசிவன் சந்நிதியில்
 - நானுகர்ந்து சுற்றி
 - நலம்பெறுதல் எக்காலம்?
 
- பர்த்திபுரி நாதன்
 - பார்வையிலே மூழ்கி
 - பதமலரில் கிடந்து
 - முக்திபெறல் எக்காலம்?
 
- கல்பதரு வின்கீழ்
 - கண்மூடித் தியானித்து
 - கஞ்சமலர்ப் பாதத்தை
 - யாசித்தல் எக்காலம்?
 
- அஞ்ஞான மோகத்தை
 - அடியோடு விட்டொழித்து
 - மெய்ஞ்ஞான சத்தியத்தில்
 - மேன்மையுறல் எக்காலம்?
 
- ஆத்ம யாகத்தை
 - அனவரதம் புரிவதற்கு
 - தேகம் கருவியென்று
 - தெளிந்திடுதல் எக்காலம்?
 
- ஆத்ம ஞானத்தை
 - தேடித் திசையறிந்து
 - ஆத்ம ராமனிடம்
 - அடங்குவது எக்காலம்?
 
- முனிவாதி முனிவர்களும்
 - தேடிக் களைத்திட்ட
 - முழுமுதலை அடிதொழுது
 - முக்திபெறல் எக்காலம்?
 
- ஆரண்யம் தாண்டி
 - அகழிபல தாண்டி
 - காருண்ய ஞானத்தைக்
 - கண்டிடுதல் எக்காலம்?
 
- பழைய வாசனையை
 - அடியோடு விட்டொழித்து
 - பர்த்தி வாசனையில்
 - தோய்ந்திடுதல் எக்காலம்?
 
- பர்த்தீசன் கோயிலை
 - பன்னாளும் சுற்றிவந்து
 - பரமபத வாயிலை
 - அடைந்திடுவ தெக்காலம்?
 
- சங்கல்பம் ஏதுமின்றி
 - சங்கரனை தியானித்து
 - சத்யஞானம் பெற்று
 - ஒடுங்குவது எக்காலம்?
 
- எண்ணம் அழிந்து
 - ஏதுமற்ற கூடாகிக்
 - கண்ணன் திருவடியில்
 - கலந்திடுதல் எக்காலம்?
 
- சும்மா இருப்பதே
 - சுகமென்று சுந்தரத்து
 - எம்மானின் சோதியிலே
 - கலந்திடுதல் எக்காலம்?
 
- மௌனத்தில் தோய்ந்து
 - மாதவனின் தீங்குரலை
 - மனவெளியில் கேட்டு
 - மயங்குவது எக்காலம்?
 
- உள்ளம் அழிந்து
 - உத்தமனின் திருமுகத்தை
 - உள்ளிருந்து பார்த்து
 - உருகியழல் எக்காலம்?
 
- சித்தத்தில் ஊறிப்
 - பொங்கும் சிவத்தேனில்
 - நித்தமும் மூழ்கி
 - நினைப்பொழிதல் எக்காலம்?
 
- எல்லாம் அவனென்று
 - பரஞானம் அடைந்து
 - எல்லாமாய் ஆனவனில்
 - அடங்குவது எக்காலம்?
 
- சத்வகுண மூர்த்தி
 - சந்நிதியில் கிடந்தழுது
 - சத்யசிவ சுந்தரத்தில்
 - அடங்குவது எக்காலம்?
 
- (நன்றி: பத்திரகிரியார்-
 - சித்தர்பாட்டு வடிவம்)
 
- -ஶ்ரீ சத்யசாயி கவிதைகள்
 
  
  Help Desk Number: