‘ஐந்தில்’ அணிவித்து

  • இலவங்கம், ஏலம், சாதிக்காய், கற்பூரம், தக்கோலம்,
  • பஞ்சவாச மாலை சாற்றி பரப்பிரும்மனுனக்குச்
  • சூட்டியழகு பார்க்கக் கண்கள் கோடி வேண்டும்
  • சர்க்கரை, தேன், தயிர், பால், நெய், பஞ்சாமிர்தம்
  • சத்திய தெய்வமுனக்கு அபிஷேகிக்க நித்திய
  • ஆனந்தம் கோடி கோடியாய்க் கூடித்தான் வரும்
  • முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம், பஞ்ச பாணப்
  • பூமாலை சூட்டிப் பரசிவனுனைப் பார்த்தால்
  • கோடி இன்பச் சுகம் கிட்டும்
  • பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
  • என உன் பஞ்ச அவதாரக் கோலங்காணப்
  • பஞ்சமின்றிப் பசியாற்றி கோடி கோடி
  • நாராயண சேவை யளிக்கலாம்
  • காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்
  • பஞ்சயாத்திரை சென்றுன் கோடி கோடி
  • பக்தர்களுன்னருளில் அகமகிழ்ந்தருள் பெறுவர்
  • நீர்,நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்,
  • பஞ்ச பூதங்களும் உன் வசம்
  • நீ அதில் ஆட்சிதான் செய்கிறாய்
  • கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களில்
  • எக்கோடியிலும் காட்சி தந்து நீ மாட்சி செய்கிறாய்
  • சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில், உன்
  • அவதாரபஞ்ச ஆயுதங்கள்
  • சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, உன்
  • அன்புக்கருணையின் அடையாளங்கள்
  • வெண்மை, கருமை, செம்மை, பொன்மை,
  • பசுமை, பஞ்சவர்ணங்கள்
  • அன்பு, மனம், மதம், இனம், மொழிதான், உன் பக்தர்களின்
  • எண்ணங்கள் தருணங்கள் சந்தோஷங்கள்
  • உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனம்,
  • கரிசனம், அபயஹஸ்தம், பாத நமஸ்காரம்,
  • தருமே பக்தர்களெங்களுக்கு, அதுவே
  • ஆத்ம நிவேதனம், ஆனந்தசாகரம்
  • அனந்த கோடி நமஸ்காரங்கள் சுவாமி சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0