இறைவன் விலாசம்

- ஆரம்பத்திற்கே ஆரம்பமாய்
 - பிரபஞ்ச முடிவற்றப் பேரின்பமாய்
 
- ஆதாரத்திற்கே ஆதாரமாய்
 - ஆழ்ந்தகன்ற பேரியக்கமாய்
 
- தூய ஒளி நிறை பெருத்துவக்கமாய்
 - கோடித் தாயன்பின் பெருத்துவக்கமாய்
 
- தியான முடிவில் நிகழும்
 - ஆனந்த அனுபவமாய்
 - ஞான வடிவில் ஒளிரும்
 - மோன அனுபூதியாய்
 
- மோகம் அழிக்க வந்த
 - மோக வடிவமாய்
 - யோகம் அளிக்க வந்த
 - யோக வெளிச்சமாய்
 
- பெயரிடப்படாத பெயராய்
 - வர்ணிக்க முடியா வர்ணமாய்
 
- அண்ட சராசரமும்
 - நாலரை அடியில்
 - நிமிர்ந்து நடக்கும் அதிசயமாய்…
 
- எலும்பு சதையில் பிரபஞ்சமே
 - எழுந்திருக்கும் அற்புதமாய்..
 
- சூரிய சந்திரருக்கே
 - கண்கூசும் படியான
 - வெளிச்ச தேகமாய்…
 
- இந்திராதி தேவரும்
 - இருகரம் வணங்க
 - இறைவனே நீயாய்
 
- மனித வடிவெடுத்த
 - மனிதாபிமானமே
 - மனித மனதிலே தான்
 - உன் சந்நிதானமே
 
- என் கவிதையின் காரணமே – கவி
 - வரிகளை வரவேற்கும் தோரணமே
 - மொழியிலாத கவிதையின்
 - முழுமுதற்பூரணமே
 
- இருண்ட மேகம் தலையில்
 - சுருண்டு நிற்கும்
 - முடிகளா ? கார்
 - முகில்களா ? கருநாகக்
 - குடைகளா?
 
- உன்னை நீயே படைத்து
 - உன்னழகில் நீயே வியந்து வைத்த
 - திருஷ்டிப் பொட்டோ கன்னத்து மச்சம்
 
- அருவமாக உருவமாக
 - ஒன்றுமாக இரண்டுமாக
 - ஓரிரண்டின் நடுவுமாக
 - நவமாக நிற்பவனே என்
 - தவமதனை ஏற்பவனே
 
- நெருப்பை எரிக்கும்
 - நிலவை உதிர்க்குமுன்
 - பார்வையே மலர்த்தும்
 - வாழ்வை
 
- அற்புதம் நீ
 - உருவம் தாங்கி பூமிக்கு வந்த
 - அவதாரம் நீ – உன்
 - பொற்பதம் கங்கையாகி
 - பூமியைத் தழுவிடும்
 - உபகாரம் நீ! கவிச்
 - சொற்பதம் நதியாகி
 - கடலுக்குச் செய்திடும்
 - உபசாரமாய் — உயர்த்
 - தொற்பத உலகுக்கான
 - ஆதவனைச் செய்திடும்
 - அதிகாரம் நீ!
 
- சத்தியம் பேசுதல்
 - சாயிராம மந்திரமோதுதல் என
 - பக்தி மனதிற்கான
 - சிருங்காரம் நீ
 - பக்தி ஒன்றையே முழுதாய் அணியும்
 - அலங்காரம் நீ!
 
- பூமி என்பதோ
 - பூட்டப்பட்டிருக்கும் பூட்டுகள்
 - உன்
 - ஒவ்வொரு விரல்களுமே
 - ஆன்மிகம் திறக்கும் சாவிகள்!
 
- கை அசைவினால் நீ
 - காலம் அசைப்பவன்
 
- பிரம்மனையே படைத்த நீ
 - பஸ்பம் படைப்பதா பரம அதிசயம்?
 - வேத உபநிடதமாய் நீ
 - பேசுவதெல்லாம்
 - பிரபஞ்ச ரகசியம்!
 
- ஆருயிர்க்கெல்லாம் நீ
 - அவசியம்!
 - ஆன்மாக்களை உன்
 - காலடி கட்டிப்போடும்
 - இதுவல்லவா இறை வசியம்!
 
- மனமே ஏனினி கலக்கம்?
 - அற்புதங்கள் ஆண்டவ சாயியின்
 - அன்றாட வழக்கம்!
 - மௌனமே ஆன்மிக முழக்கம்
 - அகந்தையிலிருந்து விடுபட்டால்
 - அப்போதிலிருந்தில்லை புழுக்கம்
 
- இறைவனே சத்யசாயியே
 - நீயே இவ்வுலகின்
 - கலங்கரை விளக்கம்!
 - உனக்கெதற்கு இத்தனை விளக்கம்?!
 
- கவிஞர் வைரபாரதி
 - (இறைவன் ஒரு கவிதை நூலிலிருந்து…)
 
  
  Help Desk Number: