ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை
- உலகளந்தாய் தாலேலோ!
 
- வைகுண்டம் விட்டிறங்கி
 - வையகம் காக்கவந்த
 - வாசுதேவனே எங்கள்
 - சாயிதேவனே தாலேலோ!
 
- தாரணியைக் காப்பதற்குத்
 - தானாய் இறங்கி வந்த
 - தாமோதரனே!பர்த்திப்
 - பெருமானே தாலேலோ!
 
- வெங்காவ தூதரின்
 - வேண்டுதலுக்கிரங்கி வந்த
 - வேங்கட நாதனே!
 - ரத்னாகரக் குலவிளக்கே!
 - சத்யசாயி தாலேலோ!
 
- சத்யபாமா வந்துமுன்னாலே
 - காத்திருக்க
 - சத்ய நாராயண பூஜை முடியக்
 - காத்திருக்க
 - தாமோதர தீர்த்தம் தாய்பருகிக்
 - காத்திருக்க
 - தானாய் உதித்து வந்த
 - தாமரையே தாலேலோ!
 
- தேவகியின்
 - எட்டாம் கருவுதித்த
 - கண்ணனைப் போல்
 - ஈசுவரம்மாவின்
 - எட்டாம் கருவுதித்த
 - சாயிகிருஷ்ணா தாலேலோ!
 
- அந்த ஆயர்பள்ளிதான் உந்தன்
 - கொல்லப்பள்ளியென்று
 - குவலயம் வணங்கிடுமே
 - கோபாலா தாலேலோ!
 
- அவதாரமூர்த்தி நீ
 - அவதரிக்கும் போதினிலே
 - தானாய் இயங்கினவாம்
 - தம்புராவும் மத்தளமும்
 - ஆனந்தம் பாடினவாம்
 - தேவதைகள் ககனமெலாம்!
 
- மானிடரின் நற்பேறும்
 - மாதவரின் வேண்டுதலும்
 - ஆதாரமானதய்யா உன்
 - அவதார நிகழ்ச்சிக்கு!
 
- அக்க்ஷய வருஷம் தந்த
 - நவமணியே!
 - தெய்வப் பொக்கிஷமே!
 - எங்கள்
 - பொற்பதமே தாலேலோ!
 
- ஈஸ்வரம்மா பெற்றெடுத்த
 - ஈஸ்வரனே தாலேலோ!
 - சிவசக்தியாய் வந்த
 - சிவபரனே தாலேலோ!
 
- கார்த்திகைப் பூர்ணிமையாம்
 - மூன்றாம் திருநாளாம்
 - ஆருத்ரா நட்சத்திரத்தில்
 - சோமவாரம் பிறந்த
 - சொக்கேசா தாலேலோ!
 
- சத்யம் பிறந்ததுவும்
 - நித்யம் பிறந்ததுவும்
 - செகம் காத்து நிற்க
 - செகந்நாதன் பிறந்ததுவும்
 - நவம்பர் மாதத்து
 - இருபத்து மூன்றில்தான்!
 - கர்மவினை போக்கவந்த
 - கனகேசா தாலேலோ!
 
- காற்று மணத்து வர
 - ஆலய த்வஜஸ்தம்பம்
 - வரவேற்புப் பாட்டிசைக்க
 - அதிகாலை ஐந்தளவில்
 - அவதரித்த ஆண்டவனே
 - அற்புதனே தாலேலோ!
 
- கண்கள் நீலமணி!
 - கன்னத்தில் நீலமணி!
 - திருமார்பில் பொலியும்
 - கௌஸ்துபமாய் நீலமணி!
 - ஈஸ்வரம்மாவிற்குள் புகுந்த
 - நீலமணிவண்ணா!எங்கள்
 - நெடுமாலே தாலேலோ!
 
- ஈன்று புகழ் கொண்ட
 - தேவகியோ ஈஸ்வரம்மா
 - தாய்மையிலே மூழ்கடித்த
 - யசோதையோ சுப்பம்மா
 - சந்தோஷம் தரவந்த
 - சாயிகிருஷ்ணா தாலேலோ!
 
- வண்ணக் குழந்தையாய் நீ
 - தொட்டிலில் சிரிக்கையிலே
 - வாத்ஸல்யம் பொழிந்திருக்க
 - வாரியணைத்திருக்க
 - பர்த்தி மாதரெல்லாம்
 - படையெடுத்து வந்தனராம்.
 - தன் மகவாய் உன்னைத்
 - தாலாட்டிப் போயினராம்!
 
- கொண்டம்ம ராஜுவின்
 - குலக்கொடியே தாலேலோ!
 - அண்டமெல்லாம் ஆளவந்த
 - ஆண்டவனே தாலேலோ!
 
- பனைஓலைப் படுக்கையிலே
 - பாலகன் நீ படுத்திருக்க
 - பாம்பணையாய்க் கிடந்து
 - உன்னைத்
 - தாலாட்டிப் போனதுவாம்!
 
- பாம்பணைமேல் பள்ளிகொண்ட
 - ரங்கனே நீயென்று
 - ஆதிசேஷன் வந்து
 - அறிவித்துப் போனானோ!
 - பாதாதி கேசம் உனைப்
 - பாராட்டிப் போனானோ?!
 
- அழகாய்ப் பிறந்துவந்த
 - ஆண்டவனே தாலேலோ!
 - மங்கலங்கள் பொலியவந்த
 - மாதவனே தாலேலோ!
 
- தேவதைகள் நடனமிட
 - தேவர்வந்து பாட்டிசைக்க
 - ககனலோக வாத்தியங்கள்
 - களிகொண்டு தாமிசைக்க
 - தெய்வம் உனைச்சீராட்ட
 - தெய்வங்கள் வந்தனவாம்!
 
- அத்தனை தேவர்களும்
 - அடிவணங்கி நின்றாராம்!
 - சப்தரிஷியெல்லாம்
 - சுடர்விளக்காய் உனைச்
 - சுற்றிவந்து ஜொலித்தாராம்!
 - சிவசக்தி உந்தன்
 - தேகத்தில் நிறைந்ததுவாம்!
 
- சங்கு சக்கரங்கள்
 - பொன்னடியில்
 - பொலிந்தனவாம்!
 
- எங்கும் நிறைந்திருக்கும்
 - இறைவனே தாலேலோ!
 - பங்காரு என்றழைக்கும்
 - பரந்தாமா தாலேலோ!
 
- அன்னபூரணி வந்துனக்கு
 - அன்பாய்ச் சோறூட்ட
 - ஆகாயகங்கை வந்து
 - ஆசையாய் நீர்புகட்ட
 - அத்தனை சக்திகளும்
 - அன்போடு தாலாட்ட
 - ஆனந்தம் தரவந்த
 - ஆண்டவனே தாலேலோ!
 - கோனே எங்கள்
 - குலவிளக்கே தாலேலோ!
 
- நெய்வாசத் தயிரன்னம்
நிதமும் உனக்கூட்ட
தாத்தா ஒருவர் உந்தன்
பசிபோக்க வருவாராம் 
- அந்தத் தாத்தாதான்
 - யாரோ நீ யாரோ
 - இருவரும் வெவ்வேறோ
 - ஒன்றேதான் என்றறிந்தோம்
 - உத்தமனே தாலேலோ!
 
- தேடி வரமளிக்கும்
 - தேவ நாதன் உனைப்பற்றி
 - நாடிகள் பலப்பலவும்
 - நல்வாக்கு சொன்னதுவாம்!
 
- சாசுவததேவன் சத்யசாயி
 - ஆரோக்கியம் கல்வி
 - ஆன்மீகம் கலைவளர்க்கும்
 - ஆனந்த மூர்த்தியிவன்
 - முன்னிருப்பு ஷீரடி
 - பின்னிருப்பு பர்த்தியென்று
 - சுகமாய்ச் சொல்லிடுமாம்
 - சுகநாடி இங்கே!
 
- நித்யானந்த மூர்த்தி
 - சத்தியசாயி எனப்
 - புத நாடி புகன்றிடுமாம்!
 
- சங்கல்ப சித்தன்
 - கடவுள் அவதாரம்
 - சத்யம் தர்மம் சாந்தி பிரேமை
 - தரும்
 - பிரசாந்திவாசி எனச்
 - சுடர்வாக்கு சொன்னதுவாம்
 - சுக்கிர நாடி!
 
- நாராயணன் பேர்கொண்ட
 - சிவசக்தி ரூபனுக்கு
 - வியாழன் புனித தினம்
 - சித்ராவதிதீரன் இவன்
 - சமநிலைரூபன் என்று
 - பிரம்ம நாடி பேசிடுமாம்!
 
- ஆந்திரத்தில் கடவுள்
 - தானே அவதரித்தான்
 - உறங்காத யோகி
 - சத்திய நாராயணன் என்று
 - பழனி நாடி பகர்ந்திடுமாம்!
 
- பர்த்தியில் பிறந்த சத்யம்
 - ஐந்தடி மூன்றங்குல உயரம்
 - சக்தி காந்தமாய்
 - ஜெகமெல்லாம் இழுப்பான்
 - ஆன்ம விளக்கேற்றும்
 - ஆண்டவன்.
 - இவன்
 - தெய்வ மணிக்குரல்
 - திசையெல்லாம் ஒலிக்கும்
 - என்று பரவுமாம்
 - பராசக்தி பத்மபுராணம்!
 
- நவம்பர் 23ல்
 - நம் இறைவன் ஜனித்தனன்
 - என்னுமாம்
 - ஜைமினி பாரதம்!
 
- சத்யம் ரூபம் முகம்
 - தீட்சண்யம்
 - நிலம் அதிசயம் பற்றி
 - நபிமொழியில்
 - இருபத்தேழு குறிப்புகளாம்நம்
 - இறைவனைப் பற்றி…
 
- பிரபஞ்ச தீர்க்கதரிசி
 - எல்லார்க்கும் இறைவன்
 - உலகாளும் சத்யமென்று
 - வேதம் விளம்பிடுமாம்!
 
- தேடி வரமளிக்கும் நம்
 - தேவநாதனைப் பற்றி
 - நாடிகள் பல இங்கே
 - நல்வாக்கு சொன்னதுவாம்!
 
- அயோத்திக்கு ராமன்
 - துவாரகைக்கு கிருஷ்ணன்
 - ஷீரடிக்கு ஶ்ரீசாயி
 - பர்த்தியில் சத்யசாயி!
 
- பரந்தாமனாய் வந்த
 - பர்த்தீசா தாலேலோ!
 - பதினாறுகலை பொலியும்
 - அவதாரா தாலேலோ!
 
- துன்புறுவோர்க் கெல்லாம்
 - தூமணி விளக்காவாய்
 - அன்புபொழிவார்க்கு
 - ஆயிரந்தாயாவாய்
 - அருமருந்தே எங்கள்
 - அற்புதனே தாலேலோ!
 
- தர்மம் காத்துநிற்க
 - யுகம்யுகமாய் அவதரிக்கும்
 - ஜெகந்நாதா தாலேலோ!
 - கனகாம்பரதாரி எங்கள்
 - கார்வண்ணா தாலேலோ!
 
- உறங்காத யோகிக்கு
 - தாலாட்டு ஏன் என்பாய்
 - இது
 - தாயன்பால் முளைத்துவந்த
 - தங்கமணித் தாலாட்டு!
 
- நீபிறந்த நாள்போற்றும்
 - நித்திலப் பூந்தாலாட்டு!
 
- பொற்பாத கமலங்கள்
 - தொழுகின்ற பேர்க்கெல்லாம்
 - பொன்னருளைப் பொழிகின்ற
 - பூபாலா தாலேலோ!
 
- அண்டபேரண்டமெலாம்
 - ஆனந்தம் பொங்கிவர
 - அன்புருவாய் ஜனித்துவந்த
 - ஆண்டவனே தாலேலோ!
 - தாரணியைக் காக்கவந்த
 - தாசரதீ தாலேலோ!
 
- உறங்குவோரையெல்லாம்
 - எழுப்புதற்குப் பிறந்துவந்த
 - உறங்காத கண்மணியே!
 - உத்தமனே தாலேலோ!
 - உலகளந்தாய் தாலேலோ!
 
- என்றும் சாயிசேவையில்
 - பொன்மணி
 
- ஜெய் சாயிராம்!
 
  
  Help Desk Number: